Thursday, February 21, 2019

சிறுபான்மையினரை அரவணைக்கும் கலைஞர் அரவணைக்கும் கலைஞர்

பேராசிரியர் ஜவாஹிருல்லா, மனிதநேய மக்கள் கட்சித் தலைவர்

2004-ம் ஆண்டு தி.மு.க கூட்டணியை எங்களின் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் ஆதரித்தது. அப்போது, நாங்கள் காங்கிரஸ்-தி.மு.க கூட்டணியிடம் வைத்த ஒரே கோரிக்கை, இஸ்லாமியர்களுக்கு இடஒதுக்கீடு வேண்டும் என்பது. ‘மத்திய அரசின் குறைந்தபட்ச செயல்திட்டத்தில் இது இடம்பெறும்’ என்று அறிவித்தார் கருணாநிதி. ஆனால், மத்தியில் காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைந்தவுடன் இதுபற்றிய எந்த அறிவிப்பும் செய்தித்தாளில் வெளிவரவில்லை. எனவே, அதற்குக் கண்டனம் தெரிவித்து அறிக்கை கொடுத்தேன்.

மறுநாள் காலை 6.30 மணிக்கு எங்கள் அலுவலகத்துக்கு ஒரு போன் அழைப்பு. போனை செக்யூரிட்டி எடுத்துள்ளார். ‘‘நான் கருணாநிதி பேசுறேன். உங்க கட்சித் தலைவர்கள் யாராவது இருந்தா போனைக் கொடுங்க’’ என்று கூறியுள்ளார். குரலைக் கேட்டதும் செக்யூரிட்டி பதறிவிட்டார். ‘‘இப்போது யாரும் இல்லை, வந்ததும் தகவல் சொல்கிறேன்’’ என்று பதில் சொன்ன செக்யூரிட்டி, உடனடியாக எனக்குத் தகவல் சொன்னார். நான் கருணாநிதியைத் தொடர்புகொண்டேன். அவர், ‘‘ஏன் இவ்வளவு காட்டமாக அறிக்கை கொடுத்திருக்கீங்க. குறைந்தபட்ச செயல்திட்டத்தில் இடஒதுக்கீடும் உள்ளது. பேப்பர்காரங்க போடாம இருந்திருப்பாங்க” என்று சொன்னார். சற்று நேரத்தில் தயாநிதி மாறன் என்னைத் தொடர்புகொண்டு, ‘‘மத்திய அரசின் குறைந்தபட்ச செயல்திட்டத்தில் இஸ்லாமியர்களுக்கான இடஒதுக்கீடும் இடம் பெற்றுள்ளது’’ என்றார். அவ்வளவு பெரிய தலைவராக இருந்தும், காலை நேரத்தில் ஒரு அறிக்கைக்கு விளக்கம் கொடுப்பதற்கு துடித்த அந்த எண்ணம்தான் அவரின் தனித்துவம். அந்த அணுகுமுறை அனைவரும் பின்பற்றத்தக்கது.

                    ------ Pavai Aneefa

No comments:

Post a Comment